வளர்ச்சி அடைந்த பாரதத்தை நனவாக்குவோம்: விவேகானந்தர் நினைவு நாளில் ஆளுநர் புகழஞ்சலி

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நனவாக்குவோம்: விவேகானந்தர் நினைவு நாளில் ஆளுநர் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: விவேகானந்தரின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள்கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: விவேகானந்தரின் நினைவு நாளில் அவருக்கு ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும் தேசம் இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறது. பாரதத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய தர்மத்தின் ஆழத்தை உலகுக்கு சக்திவாய்ந்த முறையில் அவர் நிரூபித்தார். மேலும் பல நூற்றாண்டுகள் அந்நிய ஆளுகைகளின் போது அழிக்கப்பட்ட தேசிய பெருமையை இந்தியர்களிடையே மீண்டும் தட்டியெழுப்பினார்.இது காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலைக்கு வழிவகுத்து தேசத்தை வலுப்படுத்த உதவியது.

அவருடைய ஆன்மிகப் பயணம் தமிழகத்தின் புண்ணிய பூமியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற லட்சியத்துடன் பொருள் வளமும், ராணுவ வலிமையும், ஆன்மிக இரக்கமும் கொண்ட உண்மையான வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அவரது கனவை நனவாக்க இந்நாளில் நம்மை அர்ப்பணிப்போம்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: “காற்று என்னை கரைக்காது, கத்தி என்னை வெட்டாது, தீ என்னை எரிக்காது, நான் சர்வசக்தி வாய்ந்தவன் என்று நினைத்தால் நம் லட்சியத்தை எந்த தடையும் இல்லாமல் அடையலாம்” என்றவர் விவேகானந்தர். அவரது நினைவுநாளில் அவரின் நினைவுகளைப் போற்றி வணங்குவோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேச நலனுக்காகவும், ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்துக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, பாரதத்தின் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்குக்கு கொண்டு சென்றவர் விவேகானந்தர். ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஆன்மிக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த விவேகானந்தரின் நினைவைப் போற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in