விவசாய கோயில் நிலங்களை பாதுகாக்க கோரி வழக்கு: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

விவசாய கோயில் நிலங்களை பாதுகாக்க கோரி வழக்கு: 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்கக் கோரிதொடரப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை அதிகாரிகள் 2வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாக்க தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரிடம் ‘‘ஒரே மாதிரியாக அடுத்தடுத்து பல வழக்குகளைத் தொடர்ந்துவருகிறீர்கள். இந்த வழக்கில்உண்மைத்தன்மை இல்லாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்களுக்காக 44 ஆயிரம் பொதுநல மனுக்களை தாக்கல் செய்வீர்களா?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், ‘‘கோயில் நிலங்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருவதை ஒரு பிளாக் மெயில் நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு வரம்புக்கு உட்பட்டுத்தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

பின்னர் அரசு இயந்திரத்தின் தவறால்தான் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in