

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் உள்ளவாராக்கடன்களை வசூலிப்பதற் காக ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்க வுள்ளதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைவருக்கு மான பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். தானியங்களை பாதுகாப்பாக சேமித்து நல்ல விலை பெறுவதற்காக கூட்டுறவு அமைப்புகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் நவீன தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.
பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் ‘பணியாளர் நாள்’ நிகழ்வு நடத்தப்படும். மேலும், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
இதுதவிர விவசாயிகள் மற்றும்நுகர்வோர் பயன்பெறும் வகையில்பெருநகரங்களில் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். அனைத்து கூட்டுறவு அலுவலகங்களின் பணிகள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் பெருநகரங்களில் கூட்டுறவுசில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும். பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த விற்பனை ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
நலிந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு புத்துயிரூட்ட ‘கூட்டுறவு இணைப்புச் சங்க ஆதரவுத் திட்டம்’ கொண்டு வரப்படும்.மேலும், நவீன கூட்டுறவு தொழில்நுட்பங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல சென்னையில் ‘கூட்டுறவு தொழில்நுட்ப மையம்’ உருவாக்கப்படும்.
மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும். உறுப்பினர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும்.
மாநில அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவுச் சங்கம், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். கூட்டுறவுசங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கவும் விசாரணையை கண்காணிக்கவும் ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்கப்படும். கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகள்மேம்படுத்தப்படும். புதிதாக கூட்டுறவுசங்கங்களின் 100 கிளைகள் தொடங்கப்படும் என்பன உட்பட 43 அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.