புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு அறுவை சிகிச்சை

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு அறுவை சிகிச்சை

Published on

சென்னை: புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், 3,52,990 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடம் பெற்றார்.

இந்நிலையில், ஏ.சி.சண்முகம் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in