மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து அவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கருதும் பொதுமக்கள், மேல் நடவடிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர். அதன்படி திங்கள் முதல் வெள்ளிவரை அரசு விடுமுறை தினங்களை தவிர தினமும் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. புதன்கிழமைகளில் காவல் ஆணையரே பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை நேரில் பெற்று வருகிறார்.

அதன்படி, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பொதுமக்கள் 12 பேரின் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதேபோல், காவல் துறையைச் சேர்ந்த 11 பேரின் மனுக்களையும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் 60 மற்றும் அதற்கு மேல் வயதுடைய மூத்த குடிமக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், போலீஸாரே சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, “மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது துணை ஆணையர்கள் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, துணை ஆணையர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக ‘பந்தம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் எண்ணில் (9499957575) தொடர்பு கொண்டு பயனடையலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in