Published : 05 Jun 2024 12:06 PM
Last Updated : 05 Jun 2024 12:06 PM

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சிறப்பு பேருந்து | கோப்புப் படம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ம் தேதி (திங்கள்) தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ம் தேதி (திங்கள்) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏற்ப வரும் 9-ம் தேதி 705 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேசமயம், வரும் 8,9 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு-முகூர்த்தம்) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7,8 தேதிகளில் 1,105 பேருந்துகளும், சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 1,465 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும். வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 7,8 தேதிகளில் தலா 15 பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஜூன் 7,8,9 தேதிகளில் பயணிக்க இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x