Last Updated : 04 Jun, 2024 10:10 AM

 

Published : 04 Jun 2024 10:10 AM
Last Updated : 04 Jun 2024 10:10 AM

புதுச்சேரி தொகுதியில் முதல் சுற்றில் முந்தும் காங்கிரஸ்!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை படம்பிடிக்க புகைப்படக்காரர்கள், வீடியோக்கிராபர்களை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடக்கியது. முதல் சுற்றில் காங்கிரஸ் முந்துகிறது. நகர் பகுதிகளில் போலீஸார் ரோந்துடன் பாதுகாப்பு ஏற்பாடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில் தமிழகம், புதுவைக்கு தேர்தல் நடந்தது. புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரியில் 739, காரைக்காலில் 164, மாஹேயில் 31, ஏனாமில் 33 என மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 78.90 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பிராந்திய வாக்குப்பதிவு மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன், 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
புதுவையில் லாஸ்பேட்டை அரசு பொறியியல் கல்லூரி, மோதிலால்நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல காரைக்கால், மாஹே, ஏனாமிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார், துணை ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பில், மொத்தம் 800க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 360 டிகிரி கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதே நேரத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

முதலில் 12 சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையும், 2ம் சுற்றில் 10 சட்டப்பேரவைத் தொகுதி, 3ம் சுற்றில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 97 டேபிள்கள் போடப்பட்டுள்ளது.முதல் சுற்றில் புதுவையில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ்நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

இதில் பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.சில தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது. புதுவை மக்களவைத் தொகுதிக்கான முதல் சுற்று முன்னணி அதிகாரபூர்வ நிலவரம் காலை 11 மணிக்குள் தெரியும். வாக்கு எண்ணிக்கை பணிக்காக கண்காணிப்பாளர்கள், நுண் பார்வையாளர்கள், உதவியாளர்கள் என ஆயிரத்து 2 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

இன்று புதுவை மாநிலம் முழுவதும் மதுபான கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை நகரின் முக்கிய சந்திப்புகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையை படம்பிடிக்க புகைப்படக்காரர்கள், வீடியோக்கிராபர்களை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அனுமதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x