சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்: புதிய விதிகள் நாளை முதல் அமல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும். மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

அதிவேகத்துக்கான அபராதத்தை பொருத்தவரை ரூ.1,000 - ரூ.2,000 என்ற வகையில் இருக்கும். 18 வயதுக்குட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோருக்கு 3 மாதம் சிறை தண்டனை, ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனத்தின் பதிவுசான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

விண்ணப்பிக்கும் நடைமுறையில் பெரியளவில் மாற்றமில்லை.parivahan.gov.inஎன்ற இணையதளத்தில் வழக்கம்போல் விண்ணப்பிக்க வேண்டும். அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தோருக்கு இழப்பீடு தொகையாகரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லதுவட்டாட்சியரை அணுகி விண்ணப்பிக்கலாம். 1 மாதத்துக்குள் விசாரணை நடத்தி, மாவட்டநீதிபதி அல்லது ஆட்சியரால் இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in