கோடை மழையால் தமிழகத்தில் மின் தேவை குறைந்தது: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால், மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றில் ஒரு பங்காக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளதால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் உற்பத்தி குறைக்கப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் என மொத்தமாக 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பபடும். இந்நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அனல்மின் நிலைய அதிகாரிகள், “தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது, வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின்சார பயன்பாடு அதிகரித்தது. இதனால், அனல் மின் நிலையங்கள் முழு திறனுடன் இயக்கப்பட்டு, மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கோடை மழையின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், வீடுகள், அலுவலகங்களுக்கான மின்சார பயன்பாடும் குறைந்துவிட்டது. தேவை குறைந்ததால், அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உள்ள 4 அலகுகளில், 3 அலகில் மின்னுற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

4-வது அலகில் 160 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவில் 600 மெகாவாட்டுக்குப் பதிலாக, 335 மெகாவாட் மட்டுமே உற்பதி செய்யப்படுகிறது. இதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,440 மெகா வாட்டுக்குப் பதிலாக, தற்போது 495 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சார பயன்பாடு அதிகரிக்கும் போது, மீண்டும் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in