Published : 25 May 2024 08:20 AM
Last Updated : 25 May 2024 08:20 AM

அரசு பேருந்துகளுக்கு 2-வது நாளாக அபராதம்: போக்குவரத்து போலீஸை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோப்புப்படம்

சென்னை: சாலை விதிகளை மீறியதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து போலீஸார் நேற்று இரண்டாவது நாளாகஅபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சீருடையில் பயணித்த காவலரிடம் எப்படி டிக்கெட் எடுக்க சொல்லலாம் என போலீஸாரும், வாரன்ட் இருந்தால் மட்டுமே போலீஸாருக்கு கட்டணமில்லா பயணம் என போக்குவரத்து கழக ஊழியர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை அணியவில்லை, நிறுத்த கோட்டை தாண்டி நிறுத்துதல், நோ என்ட்ரி உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் நேற்று அபராதம் விதித்தனர். இன்றும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற 3 அரசு பேருந்துகளில் வள்ளியூர் போக்குவரத்து போலீஸார் நேற்று சோதனையிட்டனர். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதைத் தொடர்ந்து நம்பியாவின்விளையில் இருசக்கர வாகனத்தில் வந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மரிய இந்திரன் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

விதிமுறைகளை மீறியதாக 18 அரசு பேருந்துகள் மற்றும் 7 தனியார் பேருந்துகளுக்கு ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இதேபோல், கடலூர் நகர பகுதியில் 4 அரசு மற்றும் 6 தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.

விதிமுறை மீறியதாக அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் போலீஸாரைக் கண்டித்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியுசி, சிஐடியு, ஏடிபி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விதிமுறைகளை மீறியதாகக் கூறி அரசு பேருந்துகளுக்கு போலீஸார் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்து காவல் துறைக்கு உரிய அறிவுரையை தமிழக அரசு வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x