Published : 23 May 2024 03:35 PM
Last Updated : 23 May 2024 03:35 PM

சிவகாசி அருகே மகன், மகள், பேத்தியுடன் ஆசிரியர் தம்பதி தற்கொலை - போலீஸ் விசாரணை

திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை.

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (43). இவர்களுக்கு ஆனந்தவள்ளி (28) என்ற மகளும், ஆதித்யா(13) என்ற மகனும் இருந்தனர். லிங்கம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், பழனியம்மாள் சிவகாசி அருகே சுக்கிவார்பட்டி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சசிகா என்ற 3 மாத கைக்குழந்தை இருந்தது. ஆனந்தவள்ளியும் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வெகு நேரமாகியும் லிங்கத்தின் வீட்டுக் கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் அவர்களது மகன், மகள், பேத்தி என ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்த போலீஸார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக 5 பேரின் உடல்களையும் போலீஸார் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x