காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக போலீஸில் மாணவி புகார் @ மதுரை

காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக போலீஸில் மாணவி புகார் @ மதுரை
Updated on
1 min read

மதுரை: மதுரை காமராஜர் பல்கலையில் முதுநிலை வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தனது துறையில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், தனக்கு மன ரீதியான சில தொந்தரவுகளை கொடுக்கிறார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என, அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு சம்மன் ஒன்றை காவல்துறையினர் இன்று கொடுத்துள்ளனர். இப்புகார் தொடர்பாக பல்கலை. நிர்வாகத் தரப்புக்கும் தகவல் தெரிவித்து இருப்பதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

பேராசிரியர் மட்டுமின்றி பல்கலைக்கழக முக்கியப் பொறுப்பிலும் இருக்கும் ஒருவருக்கு எதிராகவும் காவல் நிலையத்தில் மாணவியை புகார் கொடுத்து இருப்பது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல்கலை பேராசிரியர் ஒருவருக்கு எதிராக மாணவி புகார் அளித்து இருப்பது உண்மைதான். சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு அந்த மாணவி உறவினர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், புகார் குறித்த விசாரணைக்கு பிறகு தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in