நீலகிரியில் தொடரும் மழை: வாகனத்தில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

நீலகிரியில் மழைநீர் சூழ்ந்த ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரியில் மழைநீர் சூழ்ந்த ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று பெரும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில், உதகை ரயில் பாலத்தில் தண்ணீரில் சிக்கிய வாகனத்தில் தத்தளித்த சுற்றுலா பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக பனிப் பொழிவு மற்றும் மழையின்மை காரணமாக கடும் வறட்சி நிலவியது. கோடை மழையும் உரிய நேரத்தில் பெய்யாததால், வறண்ட காலநிலை நிலவியது. நீர் வரத்து இல்லாமல் நீர்த்தேக்கங்கள் வறண்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
உதகையில் மழை பெய்யும் நாட்களில், ரயில்வே பாலம் அடியில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்நிலையில், உதகையில் பெய்த கனமழையில், வழக்கம் போல, ரயில்வே பாலம் அடியில் தண்ணீர் தேங்கியது.

அப்போது, படகு இல்லத்துக்கு சென்று திரும்பிய சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தன. இவற்றில் சில வாகனங்கள் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டதால் அதனுள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுற்றுலா பயணிகளை வாகனத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பாக மறுபுறமுள்ள சாலைக்கு கொண்டு வந்தனர்.

குளம் போல் தேங்கிய தண்ணீர் காரணமாக, நகர பேருந்துகள் பெர்ன்ஹில் வழியாக திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, “உதகை படகு இல்லத்துக்கு செல்லும் வழியில் இருக்கும், இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி சிறிய வாகனங்கள் இங்கு சிக்கிக்கொள்கின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in