‘யானை வழித்தடம்’ கருத்துகேட்பு கூட்ட அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை

‘யானை வழித்தடம்’ கருத்துகேட்பு கூட்ட அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: யானைகள் வழித் தடம் குறித்து பொதுமக்களிடம் நடத்தப்பட உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வனத்துறை கடந்த ஏப்ரல் 29-ம் தேதி யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 42 இடங்களில் யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக ஒருவார காலத்துக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட வனத்துறை போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒருவார காலத்துக்குள் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கோரியிருப்பது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல.

குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு கருத்து கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். யானைகள் வழித்தடம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறியும் வகையில் விரிவான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திட வனத்துறை மற்றும் வருவாய்த்துறை முன்வரவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in