ஒரே மாதத்தில் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின் உற்பத்தி @ சென்னை மாநகராட்சி

ஒரே மாதத்தில் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின் உற்பத்தி @ சென்னை மாநகராட்சி
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், அதை சாதகமாக பயன்படுத்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சார பயன்பாட்டை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரியஒளி மின்சாரம் மூலம் மின்னுற்பத்தி செய்து பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.30 கோடி செலவில் மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள் என 662 கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு மேல் மின் செலவு குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் முழுவீச்சில் ஈடுபட்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் வரை தான் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக, அதிகபட்சமாக 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாத மின் கட்டண செலவை ரூ.16 லட்சம் வரை குறைத்துள்ளது. உலக அளவில் சூரிய ஒளி மின்னுற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியும் பங்களித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in