Published : 15 May 2024 06:30 AM
Last Updated : 15 May 2024 06:30 AM

Bandicoot: கழிவுநீர் குழாய் அடைப்பை நீக்க நவீன இயந்திரம் - சென்னையில் சோதனை முயற்சி

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் குழாய் கட்டமைப்புகளில் அடைப்புகளை நீக்க பயன்படுத்தப்படும் நவீன ‘பண்டிகூட்’ இயந்திரம்.

சென்னை: சென்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர். மக்கள்தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1072 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சொந்த ஆதாரங்கள், கேன் குடிநீர்மூலம் தினமும் 200 மில்லியன்லிட்டருக்கு மேல் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் நீர், சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவுநீராக தினமும் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்திடம் கழிவுநீரை வெளியேற்ற, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 9 லட்சத்து 30 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றின் வழியாக வரும் கழிவுநீரை 302 கழிவுநீரேற்றும் நிலையங்கள் மூலமாக 13 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவற்றில் தினந்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் சேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் 4 ஆயிரம்கிமீ-க்கு நீளத்துக்கு மேல் கழிவுநீர்குழாய் கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

இந்த கழிவுநீர் குழாய்களுக்கு நடுவே இயந்திர நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கழிவறைகளில் அஜாக்கிரதையாக வீசும் நாப்கின்கள் மற்றும் இதர பொருட்கள், இந்த இயந்திர நுழைவு வாயில்களில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த குழாய்களில் எலிகள் வலைகளை ஏற்படுத்தி மண்ணையும் தள்ளிவிடுகின்றன. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்வது தடை படுகிறது.

இத்தகைய அடைப்புகளை நீக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்கள் இறக்கப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தற்போது இயந்திர ஆட்டோக்கள் மூலமாக அடைப்புகள் நீக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளின்போது சில ஆண்டுகளுக்கு முன்பு, மாதவரம் பகுதியில் இரு பணியாளர்கள் விஷ வாயு தாக்கி இயந்திர நுழைவு குழியில் விழுந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புநிதியில் 3 நவீன அடைப்பு நீக்கும்‘பண்டிகூட் (Bandicoot)' இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த இயந்திரம் ‘போராடிக்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை கொண்டு, இயந்திர நுழைவு வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும். அதில் சென்சார் கேமராக்கள், விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அடைப்பு நீக்கும் பணி எளிதாகும்.

விஷ வாயு தாக்கி பணியாளர்கள் மரணிப்பதை தடுக்க முடியும். மனித உழைப்பும் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இயந்திர நுழைவு வாயில்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை பார்க்க பெரிய திரையும் இடம்பெற்றுள்ளது. அதில் பார்த்து எளிதில் அடைப்புகளை நீக்க முடியும். இதன் பயன்பாடு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பிற மண்டலங்களில் விரிவாக்குவது குறித்து வாரிய தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x