Published : 14 May 2024 06:20 AM
Last Updated : 14 May 2024 06:20 AM

சென்னை | தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடா பேசியதைக் கண்டித்து, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர் . | படம்: ம.பிரபுவேண்டுகோள் |

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு பேசியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலதுணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்காததால், வள்ளுவர் கோட்டம் வந்த பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் கரு.நாகராஜன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில் கூடினர்.போலீஸார், அப்பகுதிக்கு சென்று அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

அப்போது, கரு.நாகராஜன் கூறுகையில், ‘`ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. விரைவில் நீதிமன்றம் சென்று, இதே வள்ளுவர் கோட்டத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x