Published : 12 May 2024 01:00 PM
Last Updated : 12 May 2024 01:00 PM

‘மூன்றாண்டு திமுக ஆட்சியின் நினைவுப் பரிசு’ - முத்திரைக் கட்டண உயர்வு; இபிஎஸ் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது திமுக அரசு.தமிழகத்தில் எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தரப்போகிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாகவே இருக்கிறதென்று சொன்னால் அது மிகையாகாது. திரும்பிய துறைகளில் எல்லாம் நிர்வாகத் திறமையற்று மக்கள் தலையில் பேரிடியாய் வாய்த்திருக்கின்ற இந்த அரசு, தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஏற்கெனவே 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளிகள் ஆக்கியுள்ளது. அது போதாதென்று 150 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு என தனது நிர்வாகத் திறமையின்மையினால், மக்கள் தலையில் சுமைகளை ஏற்றியுள்ளது இந்த திமுக அரசு.

கடந்த 8.7.2023 அன்று, பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி மக்களை பெரும் சிரமத்துக்கு ஆளாக்கிய திமுக அரசு, தற்போது தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 8.5.2024 அன்று தேதியிட்ட அரசு அறிவிக்கையின்படி, 3.5.2024 முதல் தத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தியுள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு.

இருக்கின்ற நிதியை சரிவர மேலாண்மை செய்து, புதிதாக வாங்கும் கடன்களை மூலதனச் செலவுகளாகவும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்ல அரசின் இலக்கணம். அதன்படி செவ்வனே செயல்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசும், எனது தலைமையிலான அதிமுக அரசும் மக்கள் மீது சுமைகளை பெரிதும் ஏற்றாமல், பொருளாதாரத்தை உரிய குறியீடுகளுக்குள் சரிவர நிர்வகித்து வந்தது.

ஆனால், கலெக்சன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அனைத்துத் துறைகளையும் முறைகேடுகளால் சீர்குலைத்து, மாநிலத்தின் நிதிநிலைமையை நிலைகுலையச் செய்து, தன் தவறுகளால் ஏற்படும் பாரத்தை, வரி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவது கடும் கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே, திமுக அரசு கொண்டுவந்த வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இதுவரை இந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இதுவரை தடையாணை தரவில்லை.

எனவே, எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x