பட்டியலின மக்களுக்கான நிலத்தில் தனியார் நிறுவன கட்டுமானங்களுக்கு தடை கோரி வழக்கு

பட்டியலின மக்களுக்கான நிலத்தில் தனியார் நிறுவன கட்டுமானங்களுக்கு தடை கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: பட்டியலின மக்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி கூட்டமைப்பு நிர்வாக இயக்குனரும், தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின கவுன்சில் தேசிய அமைப்பாளருமான கவுதம சித்தார்த்தன் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள இங்கூர் தொழில்பூங்காவில் பட்டியலின மக்கள் பின்னலாடை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம், 150 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது.

இதற்காக, கடந்த 1995-ம் ஆண்டு ரூ.203 கோடி செலுத்தப்பட்டது.கடந்த 2003-ம் ஆண்டு தாட்கோவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில், 200 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படாததால் கட்டுமானங்கள் சேதமடைந்து விட்டது.

இந்த நிலத்தில் இருந்து 48 ஏக்கர் நிலத்தை கடந்த 2021-ம் ஆண்டு திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகம் எனும் சிப்காட் ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த பொது அறிவிப்பும் வெளியிடாமல், மூன்று தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சையானது. எனவே, இந்த நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள மூன்று தனியார் நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். 200 கொட்டகைகளையும் பட்டியல், பழங்குடியின நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in