இடம்: கோவை மாநகராட்சிப் பள்ளி; படம்: ஜெ.மனோகரன்
இடம்: கோவை மாநகராட்சிப் பள்ளி; படம்: ஜெ.மனோகரன்

10 ஆம் வகுப்பு முடிவுகள்: அரியலூர் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

Published on

சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியிருக்கும் நிலையில், அரியலூர் மாவட்டம் 97.31 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.

அதாவது, அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

82.07 சதவீதத்துடன் வேலூர் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் 30வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in