Published : 10 May 2024 05:40 AM
Last Updated : 10 May 2024 05:40 AM

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: மதுரையில் நடத்த விஜய் திட்டம்?

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரைப்பட நடிகர் விஜய் கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான் ஒரே இலக்கு எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

2 கோடி இலக்கு: மேலும், 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைபணிகளில் கவனம் செலுத்திவந்தார். மக்களவைத் தேர்தலால் தவெக கட்சி பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டதால், தற்போது நடிகர் விஜய் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தவெக கட்சி கொடி தேர்வு, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நடிகர் விஜய் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல், கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த வகையில், முன்பு வெளிவந்த தகவலின் படியே மதுரையில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போதும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம்தேதியில் கட்சியின் முதல்மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த மாநாட்டில்கட்சியின் கொடி, சின்னம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் நடைபெற உள்ள விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x