இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதை போக்குவரத்து போலீஸார் கைவிட கோரிக்கை

இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதை போக்குவரத்து போலீஸார் கைவிட கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: இலக்கு நிர்ணயித்து போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிமை குரல் (ஓட்டுநர் தொழிற்சங்கம்) மாநில தலைவர் இ.சே.சுரேந்தர், பொதுச் செயலாளர் அ.ஜாகீர் உசேன் ஆகியோர் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு ரக சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வாகனங்கள் சாலைகளில் லோடு இல்லாமல் சென்றாலும் அல்லது அனுமதித்த அளவிலான லோடுகளை ஏற்றி சென்றாலும் கூட போக்குவரத்து காவல் துறையினர் தங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி அபராதம் விதிக்கின்றனர்.

மேலும், கால் டாக்ஸி, டூரிஸ்ட்கேப், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கும், எப்போதோ எடுத்து வைத்த புகைப்படங்களை அப்லோடு செய்தும் பல்வேறு வகையிலான ஆன்லைன் அபராதங்களையும் கண்மூடித்தனமாக போக்குவரத்து காவல் துறையினர் விதிக்கின்றனர்.

இதனால், ஓட்டுநர்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற் படுவதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, போக்கு வரத்து காவல் துறையினருக்கு இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். மேலும், தவறான அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை எளிய முறையில் நீக்குவதற்கான வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும்.

கடந்த 6-ம் தேதி சென்னை கொளத்தூரில் பள்ளிக்கு நோட்டு புத்தகங்களை ஏற்றி சென்ற ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in