Published : 10 May 2024 06:06 AM
Last Updated : 10 May 2024 06:06 AM

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 சிசிடிவி கேமராக்கள் பழுது

சென்னை: தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 சிசிடிவி கேமராக்கள் நேற்று பழுதாகின. தென் சென்னை மக்களவை தொகுதியில் சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 10 லட்சம் ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 21 ஆயிரம் பெண்வாக்காளர்கள், 464 திருநங்கையர் என மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 10 லட்சத்து 96 ஆயிரம் பேர் (54.17 சதவீதம்) வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் 4 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு, 210 சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த வேட்பாளர்களின் முகவர்களும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாதுகாப்பு அறைக்கு வெளிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 2 சிசிடிவி கேமராக்கள் பழுதாகின. இதற்கு வேட்பாளர்களின் முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 2 சிசிடிவி கேமராக்கள் பழுதாகின. அது எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் பழுது நீக்கப்பட்டது. பாதுகாப்பு அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள எந்த கேமராக்களும் பழுதாகவில்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x