Published : 08 May 2024 05:29 AM
Last Updated : 08 May 2024 05:29 AM

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரின் வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி சோதனை

ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் | கோப்புப் படம்

சென்னை: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு மற்றும் ஹோட்டலில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் கடந்த 6-ம் தேதி நெல்லை விரைவுரயிலில் ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணத்தை கொண்டு சென்றதாக பாஜக வேட்பாளரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு கொண்டுசெல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதை நயினார் நாகேந்திரன் மறுத்தார்.

இதற்கிடையே தாம்பரம் ஆணையர் அமல்ராஜின் பரிந்துரையை ஏற்று இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தொடர்புடைய ஆவணங்கள் சிபிசிஐடி பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன்பேரில் அப்பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் விசாரணையை தொடங்கினார்.

இதனிடையே தாம்பரம் போலீஸார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்தனர். மேலும் ரயிலில்பணத்துடன் பிடிபட்ட மூவரும் வரவழைக்கப்பட்டு சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவைஅத்தனையும் வீடியோ மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் எனக் கூறப்படும் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக சென்னை நீலாங்கரையில் வசித்துவரும் பாஜக பிரமுகர் கோவர்த்தனிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டதால், வீட்டில் இருந்த அவரது மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விட்டு போலீஸார் திரும்பினர். கோவர்த்தனன் சென்னை திரும்பிய பிறகு, மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்துவோம் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் கோவர்த்தனின் வீடு மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஹோட்டலில் சிபிசிஐடி போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுகுறித்த தகவல்களை போலீஸார் வெளியிட மறுத்து விட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x