Published : 08 May 2024 05:52 AM
Last Updated : 08 May 2024 05:52 AM

‘ஜெயக்குமார் கடிதத்தில் உள்ள தகவல் பொய்’ - போலீஸார் விசாரணையில் கே.வீ.தங்கபாலு விளக்கம்

திருநெல்வேலியில் தனிப்படை போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராக புறப்பட்ட கே.வீ. தங்கபாலு. படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி: மர்மமான முறையில் உயிரிழந்ததிருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான கே.வீ.தங்கபாலுவுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று அவர் திருநெல்வேலிக்கு வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள தனியார்ஓட்டலில் வைத்து களக்காடு காவல்ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப்பின் செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறியதாவது: ஜெயக்குமார் எழுதியகடிதத்தில், எனக்கு பணம் கொடுத்தார் என்றும், அந்தப் பணத்தைசட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரனிடம் பெற்றுக் கொள்ளும்படி கூறியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அது முற்றிலும் பொய். தேர்தல் காலத்தில் கட்சிதலைமை அல்லது வேட்பாளர்கள்தான் எல்லா செயல்பாடுகளையும், உதவிகளையும், தேவையான நடைமுறைகளையும் செய்வார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல எல்லா கட்சிக்கும் பொருந்தும்.

தமிழக அரசியலில் 54 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன். இதுவரை என்னிடத்தில் யாரும் பணம்கொடுத்ததாகவோ, நான் வாங்கிக்கொண்டதாகவோ எந்த குற்றச்சாட்டும் என்மீது இல்லை. பணம் வாங்க வேண்டிய அவசியம் எனக்குஇல்லை. பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை.

தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டியது என்னுடைய பணியாக இருந்தது. அதை நான் சிறப்பாக செய்தேன். தேர்தல் பணிகளை பற்றியும் நடைமுறையில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் வெளியில் பேச முடியாது.

ஜெயக்குமார் மரணம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதை நான் மறுக்கிறேன். அதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது என்பதையும் அழுத்தமாக கூறிக் கொள்கிறேன்.

எனது வாக்குமூலத்தை கடிதமாக எழுதி காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன். விசாரணைசரியான முறையில் நடைபெறுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைப்பது குறித்து காவல்துறை என்னிடம் எதுவும் கூறவில்லை. எப்போது விசாரணை என்றாலும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். இவ்வாறு தெரிவித்தார்.

ரூபி மனோகரனிடம் விசாரணை: இதுபோல் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரனிடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பூச்சிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x