Last Updated : 07 May, 2024 02:03 PM

 

Published : 07 May 2024 02:03 PM
Last Updated : 07 May 2024 02:03 PM

கொடைக்கானலில் அமலுக்கு வந்தது ‘இ-பாஸ்’ - சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதி

கொடைக்கானல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (மே 7) காலை முதல் இ-பாஸ் அமலுக்கு வந்தது. க்யூஆர் கோடு மூலம் சோதனை செய்த பிறகே சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, இன்று (மே 7) முதல் ஜூன் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று (மே 6) காலை 6 மணி முதல் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவுகள் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். சுற்றுலா பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்த உடனே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை ‘க்யூஆர்’ கோடு மூலம் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அவர்களது செல்போன் வாயிலாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் இமெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களை சமர்ப்பித்து இ-பாஸ் பெறலாம். அரசு பேருந்துகளில் பயணிப்போர் இ-பாஸ் பெற வேண்டியதில்லை.

இந்நிலையில் நேற்று காலை முதல் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது. கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்க சாவடியில் க்யூஆர் கோடு மூலம் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே நகருக்குள் டூவீலர் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த இடத்திலேயே இ-பாஸ் பதிவு செய்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இ-பாஸ் குறித்து அறியாத வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பெறும் முறை குறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்கி, இ-பாஸ் பெற உதவினர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்குவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இன்று மட்டும் 3,792 வானங்களுக்கு கொடைக்கானல் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x