Published : 06 May 2024 07:46 PM
Last Updated : 06 May 2024 07:46 PM

5 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவமும், நடவடிக்கையும் - சென்னை போலீஸ் விளக்கம்

சென்னை: புகழேந்தியின் வீட்டு மெயின் கதவு திறந்து இருந்ததால், நாய்கள் வீட்டிலிருந்து வெளியேறி எதிரே பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4வது லேன் என்ற முகவரியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து கொண்டு, அவரது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார். நேற்று (மே 5) இரவு 7.30 மணியளவில், ரகுவின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பூங்காவின் எதிர் வீட்டில் வளர்த்து வரும் 2 நாய்கள் திடீரென வீட்டிலிருந்து வெளியேறி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த ரகுவின் மகளான சிறுமியை கடித்தது.

உடனே சிறுமியின் தாயார் நாய்களை விரட்டியபோது, தாயையும் நாய்கள் கடிக்கவே, சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி சிறுமி மற்றும் தாயை மீட்டனர். ரத்தக் காயமடைந்த சிறுமி மற்றும் தாயை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், ஆயிரம் விளக்கு (F-4) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஆஜாக்கிரதையாக செயல்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் புகழேந்தி (63), அவரது மனைவி தனலஷ்மி (59), மற்றும் மகன் வெங்கடேஸ்வரன் (30), ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் புகழேந்தியின் வீட்டு மெயின் கதவு திறந்து இருந்ததால், மேற்படி நாய்கள் வீட்டிலிருந்து வெளியேறி எதிரே பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கடித்துக் குதறிய ராட்வைலர் நாய்கள் தடை செய்யப்பட்ட இனங்கள் என்பதும், இவற்றை வளர்க்க புகழேந்தி லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்பதும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நாய் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியை கடித்து குதறிய நாய்க்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதா? தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடைத் துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய் கடித்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட நாய் தடைசெய்யப்பட்ட இன வகையைச் சார்ந்தது. ஆனால், அந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மூன்று மாநில உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன.

அதேநேரம் சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை எந்த பிராணிகளை வளர்த்தாலும் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில், புகழேந்தி குடும்பத்தினருக்கு கட்டாயமாக நோட்டீஸ் அனுப்பப்படும். காரணம் அவர்கள் லைசென்ஸ் எதுவும் பெற்றிருக்கவில்லை. லைசென்ஸ் பெறுவது குறித்தும், தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்பதையும் நாங்கள் ஒவ்வொரு முறையும் கூறி வருகிறோம். ஆனால் சிலர் பின்பற்றுவது இல்லை” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x