Published : 05 May 2024 09:08 AM
Last Updated : 05 May 2024 09:08 AM

நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழை - மேட்டுப்பாளையத்தில் 20,000 வாழைகள் சேதம்

குன்னூர் லேம்ஸ் ராக் சாலையில் நிறுத்தியிருந்த கார் மீது விழுந்த மரம்.( அடுத்த படம் ) மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் சூறாவளிக் காற்றுக்கு சாய்ந்த வாழைகள்.

உதகை / கோவை: நீலகிரியில் இரண்டாம் நாளாக இடி மின்னலுடன் கன மழை பெய்தது. உதகையில் 40.2 மி.மீட்டர் மழை பதிவானது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில், நேற்று முன்தினம் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக உதகையில் 40.2 மில்லி மீட்டர், பாலகொலாவில் 20, கோடநாட்டில் 14, எமரால்டில் 12, பர்லியாறில் 10, கோத்தகிரியில் 9.5, குந்தா, அவலாஞ்சியில் 6, குன்னூரில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

மழையின் காரணமாக, குன்னூர் லேம்ஸ் ராக் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் மீது மரம் விழுந்ததில் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மழை தொடரும் பட்சத்தில் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர் காற்றுடன் நேற்று மிதமான மழை பெய்தது. சிறுமுகை உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. சிறுமுகையில் உள்ள லிங்காபுரம், காந்தையூர் பகுதிகளில் வீசிய சூறைக் காற்றால், அங்கு நூற்றுக் கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.

காரமடை, சிறுமுகை, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. சூறாவளிக் காற்றால் சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல் பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒன்பது மாத பயிரான வாழை, அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் சூறாவளிக் காற்றில் சிக்கி முறிந்து வீணானது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் நேற்று மதியம் முதல் இதமான காலசூழல் நிலவியது. குறிப்பாக மதியம் 3 மணிக்கு பிறகு திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. ஆவாரம்பாளையம், கணபதி, ஹோப்காலேஜ், சிங்காநல்லூர், உக்கடம், கவுண்டம்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. சாலைகளில் இருந்த செடி, கொடிகளின் இலைகள் காற்றில் சுழன்றடித்தபடி பறந்தன.

பசுமைப் பந்தல் சேதம்: மாநகராட்சி சார்பில், 10 சிக்னல்களில், வாகன ஓட்டிகள் நிழலில் நிற்கும் வகையில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று வீசிய சூறாவளிக் காற்றில் பல இடங்களில் பசுமைப் பந்தல் துணிகள் கிழிந்தன. தொண்டாமுத்தூர், நரசீபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x