கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சம்

Published on

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடை காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் இருக்கும்.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தினசரி மின்தேவையும் அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம்30-ம் தேதி தினசரி மின்தேவை எப்போதும் இல்லாத அளவாக 19,387 மெகாவாட்டாக அதிகரித்தது. தொடர்ந்து ஏப்.3-ம் தேதி 19,413 மெகாவாட்டாகவும், 4-ம் தேதி 19,455 மெகாவாட்டாகவும், 5-ம்தேதி 19,580 மெகாவாட்டாகவும், 8-ம் தேதி 20,125 மெகாவாட்டாகவும், 30-ம் தேதி 20,701 மெகாவாட்டாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து, மின்வாரியம் எக்ஸ்தளத்தில் வெளியிட்ட தகவலில், ‘‘தினசரி மின்தேவை மே 2-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து நுகர்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை மின்வாரியம் உறுதி செய்து வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in