Published : 04 May 2024 05:19 AM
Last Updated : 04 May 2024 05:19 AM

தமிழகத்தில் முதல்முறையாக இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை

சென்னை: இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், தமிழகத்தில் முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென் (31). தனது பத்தாவது வயதில் மின்சார விபத்தில் மூட்டுக்கு கீழ் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார். தொடர் முயற்சியால் பொறியியல் படித்து முடித்த பின், பி.எல். படித்த அவர் எம்.எல். படித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.

தொழிலதிபர் ஸ்ரீவாரி சங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவியுடன் கார் ஓட்டுவதற்குகற்றுக் கொண்ட தான்சென், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தபோது நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை கே.கே. நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையின் உதவியை நாடினார்.

அங்கு, அவருக்கு ஏற்ப காரின் வடிவமைப்பை மாற்றி, தானியங்கி கியர் முறையைக் கையாளும்படி அறிவுறுத்தப்பட்டது. மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் திருநாவுக்கரசு மற்றும் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் தான்சென் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டில் மூன்றாவது நபராகவும் இரண்டு கைகள் இல்லாத ஒருவர், கடந்த வாரம் ஓட்டுநர் உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் பி.திருநாவுக்கரசு கூறும்போது, “மாற்றுத் திறனாளியான தான்சென் கார் ஓட்டுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நாங்கள்,மற்றவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டோம்.

முழங்கை மூட்டு கைகளிலேயே காரின் ‘ஸ்டேரிங்’ பிடித்து ஓட்டியஅவருக்கு, பேலன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதையும் கண்டறிந்தோம். அவர் கைகளின் முட்டி மற்றும் கால்கள் மூலம் காரை ஓட்டி காண்பித்தார். தானாக காரின் கதவைத் திறப்பது, சீட் பெல்ட் போடுவது, அவசர நேரத்தில் பிரேக் பிடிப்பது, ஹாரன் அடிப்பது போன்றவற்றை பல்வேறு வகையில் மூன்று மாதங்களாக கண்காணித்து, சில பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவரது காரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்த பிறகு, அவர் நன்றாக கார் ஓட்டினார். அதனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பரிந்துரை வழங்கப்பட்டது. தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள அவர், மற்றவர்களைபோல நன்றாக கார் ஓட்டுகிறார் என்றார்.

தான்சென் கூறும்போது, “எனதுகார் ‘ஆட்டோமெடிக் கியர் மற்றும்பிரேக்’ தன்மை கொண்டது. இதனால், திருப்பதி மலையிலும் தானாக கார் ஓட்டினேன். எனக்குஉதவிய நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீவாரி சங்கர் மற்றும் மருத்துவர்கள், ஆர்டிஓ உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x