இரு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை

இரு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை
Updated on
1 min read

கோவை: மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக உள்ளது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள் மற்றும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் பெரும்பான்மை யான இடங்களில் வெப்பநிலை 111 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்றும், கடும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மரங்களை நட்டு வளர்க்கமாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அக்கறை செலுத்தவில்லை என்பது வருத்தம் அளிக்கும் உண்மை. மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், கடும் கோடை வெப்பத்தில் இருந்தும் மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

திமுக அரசு இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. வழக்கம்போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். பெருமழை வெள்ளத்தைப் போலவே, கடும் கோடை வெப்பமும் இயற்கை பேரிடர்தான். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோடை வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, ஆவின் நிறுவனம் மூலம் ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை அரசு வழங்க வேண்டும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in