Published : 04 May 2024 06:03 AM
Last Updated : 04 May 2024 06:03 AM

ராயக்கோட்டை, சூளகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை

கிருஷ்ணகிரி/ஓசூர்: சூளகிரி பகுதியில் நேற்று 2-வது நாளாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், பசுமைக்குடில், பீர்க்கன்காய் செடிகள் சேதமாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது.

அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையம் மாசாணிபட்டி கிராமத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தலிங்கம் என்பவர் தான் வளர்த்து வரும் காங்கேயம் இன காளையை அங்குள்ள புளியமரத்தில் கட்டி வைத்திருந்தார். மழையின் போது மின்னல் தாக்கியதில் காளை உயிரிழந்தது.

காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பெய்த மழைக்கு மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில், இரவு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். மின்வாரிய ஊழியர்கள், இரவு, பகலாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு, மின்சாரம் வழங்கினர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலில் சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப்பாக ராயக்கோட்டை அருகே உள்ள வரகானப்பள்ளியில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு, செல்வி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பசுமைக் குடில் முற்றிலும் சேதமானது. மேலும், பசுமை குடிலில் பயிரிட்டுள்ள குடை மிளகாய் செடிகளும், காய்களும் சேதம் அடைந்தன.

இதேபோல் சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் வீசிய காற்றுக்கு பீர்க்கன்காய் செடிகளும், காய்களும் சேதமானது. மேலும், கூரைவீடுகளின் மேற்கூரைகளும் சேதமானது. கிருஷ்ணகிரி நகரில் 2-வது நாளாக பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. புழுக்கம் அதிகரித்ததால் மக்கள் அவதியுற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x