Published : 29 Apr 2024 04:45 AM
Last Updated : 29 Apr 2024 04:45 AM

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்வெற்றி பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக சாதித்துள்ளார். அவர் தனது 12-வது வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றவர். இளம் வீரராக வரலாறு படைத்த அவர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நேற்று முகாம் அலுவலகத்துக்கு அழைத்து குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் குகேஷுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூட முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘இளம் வயதில் ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை அளித்து வாழ்த்தினேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்துவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுக்கு பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன் ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலையும், மனதையும் விழிப்புடனும்சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அது உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகை பெற்ற குகேஷ் கூறும்போது, ‘‘தமிழகஅரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகையில் ஊக்குவித்து வருகிறது. பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையையும், போட்டி முடிந்த பிறகு பரிசுத் தொகையையும் உடனடியாக வழங்கியது மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்’’ என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டிஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x