வள்ளலார் சர்வதேச மைய பணிகள் மீண்டும் நிறுத்தம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி. சர்வதேச மையம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது, வேறு இடத்தில் அமைக்கவேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் இந்த இடத்தை வள்ளலாருக்கு வழங்கிய பார்வதிபுரம் கிராம வம்சாவளியினர், சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சர்வதேச மைய கட்டுமானப் பணிக்கு எதிராக வடலூரில் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றன. ஊர் மக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களுடன் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக சர்வதேச மையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், கடந்த 21-ம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பெருவெளியில் நடைபெற்று வந்த கட்டுமானப்பணிகள் கடந்த 3 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளதால், அதற்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in