Published : 26 Apr 2024 04:49 AM
Last Updated : 26 Apr 2024 04:49 AM

பத்திர பதிவு, வருவாய், தொலைவு அடிப்படையில் தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

கோப்புப் படம்

சென்னை: பத்திரப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தொலைவு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தல், பிரித்தல் உள்ளிட்ட சீரமைப்புக்கான அடிப்படை பணிகளை பதிவுத்துறை தொடங்கியது.

இதுகுறித்து, அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கும் கூடுதல் சீட்டு பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பதிவுத்துறையில் தற்போதுள்ள 56 பதிவு மாவட்டங்களில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பதிவுத்துறை தொடர்பாக கடந்த ஏப்.5-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களையும் ஆய்வு செய்து, மிக அதிகமாக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களை கண்டறிந்து, அதிலுள்ள கிராமங்களை பிரித்து, அருகில் உள்ள பதிவாளர் அலுவலகங்களுடன் இணைப்பது, புதிய அலுவலகங்களை தோற்றுவிப்பது, அதிக ஆவணங்கள் பதிவு நடைபெறாத அலுவலகங்களை, அருகில் உள்ள அலுவலகங்களுடன் இணைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் ஏப்.29-க்குள் அனுப்ப வேண்டும்.

அதில், அலுவலகம் தொடங்கப்பட்ட நாள், கிராமங்கள் விவரம், வருவாய் வட்டம், வருவாய் மாவட்டம், கிராம வாரியாக கடந்த 3 நிதியாண்டுகளில் பதிவான ஆவணங்களின் எணணிக்கை, 3 ஆண்டுகளின் சராசரி, வருவாய் மற்றும் சராசரி வருவாய், கிராமங்களுக்கும், சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையிலான தூரம், குறைந்த ஆவணப்பதிவுள்ள அலுவலகங்களை அருகில் உள்ள அலுவலகத்துடன் இணைக்கும் போது, அந்த அலுவலகங்களின் கீழ் வரும் கிராமத்துக்கும், இணைக்கப்படும் அலுவலகத்துக்குமான தூரம், அவ்வாறு இணைக்கப்படும்போது எதிர்பார்க்கப்படும் பதிவு எண்ணிக்கை, வருவாய், புதிய அலுவலகம் தோற்றுவிக்க வேண்டியிருந்தால், கிராமங்களுக்கும் அலுவலகம் அமைவிடத்துக்கும் இடையிலான தூரம், எதிர்பார்க்கப்படும் ஆவணப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தேவையான பணி அமைப்பு விவரம், தொடரும், தொடரா செலவினம் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x