Published : 20 Apr 2024 08:29 AM
Last Updated : 20 Apr 2024 08:29 AM

தமிழகத்தில் நகரங்களில் வாக்குப்பதிவு அதிகரிப்பு; ஊரக பகுதிகளில் குறைவு

சென்னை: மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்பஅலை வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்ததால், பொதுமக்கள் காலை 6.30 மணிக்கே அதிகளவில் வந்து, வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இது வாக்குப்பதிவு சதவீதத்தில் பிரதிபலித்தது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள நகரங்களை பொறுத்தவரை சென்னையில் வாக்குப்பதிவு 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் 58.98 சதவீதமாக இருந்த மத்திய சென்னை தொகுதியில், இம்முறை 67.35 (7 மணி நிலவரம்) சதவீதமாகவும், கடந்த முறை 57.07 சதவீதமாக இருந்த தென்சென்னையில் இந்த முறை 67.82 சதவீதமாகவும், கடந்தமுறை 64.26 சதவீதமாக இருந்த வடசென்னையில் இம்முறை 69.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2019 மக்களவை தேர்தலை தொடர்ந்து, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைந்திருந்த நிலையில், சென்னையில் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சி வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் கடந்த 2019-ல் 63.86 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்தமுறை 71.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த முறை 66.09 ஆக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 68.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. திருச்சியிலும் கடந்த முறை 69.50 சதவீதமாக இருந்தது, இம்முறை 71.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நகரங்களுக்கு அடுத்தபடியாக, வாக்கு சதவீதம் உயர்ந்த தொகுதிபெரும்புதூராகும். இத்தொகுதியில், கடந்த தேர்தலில் 62.44 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்த தேர்தலில் 69.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், அதிக ஊரகப்பகுதிகள் சார்ந்த தொகுதிகளில், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் 82.41 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த தருமபுரி தொகுதியில் இம்முறை 75.44 சதவீதமே வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல் 80.22 சதவீதத்துடன் 2-ம் இடத்தில் இருந்த நாமக்கல் தொகுதியில் 74.29 சதவீதமாகவும், 79.55 சதவீதத்துடன் 3-ம் இடத்தில் இருந்த கரூர் தொகுதியில் இம்முறை 74.05 சதவீதமாகவும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இதுதவிர, பெரம்பலூர், அரக்கோணம், ஆரணி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊரகப்பகுதிகள் சார்ந்த தொகுதிகளில் கடந்த தேர்தலை விட 4 முதல் 5 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, இந்த தேர்தலில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், இது கடந்த தேர்தலில் 72.44 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, பல பகுதிகளில் 8 மணி வரையும் வாக்குப்பதிவு தொடர்ந்த நிலையில், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறைகள் களையப்பட்டு இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x