

கடலூர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கையை முன்வைத்து எஸ்.எரிப்பாளையத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி ஒன்றியம் எஸ்.ஏரிப்பாளைம் கிராமத்தில் சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ளது. இதனால், அரசின் திட்டப்பணிகள் மற்றும் நல உதவிகள் கிடைப்பதில் எஸ்.எரிப்பாளையம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள், எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.ஏரிப்பாளையம் கிராம பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குச்சாவடி பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக தயார் நிலையில் இருந்தும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.
இதேபோன்று அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி முதனை ஊராட்சியில் இருந்து புதுவிருத்தக்கிரிகுப்பம் மற்றும் பரவளூர் ஊராட்சியில் இருந்து கச்சிபெருமாநத்தம் ஊராட்சியை உருவாக்க வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், விருத்தாசலம் வட்டாட்சியர், புதுவிருத்தகிரிக்குப்பம் மற்றுமந் கச்சிபெருமாநத்தம் கிராம மக்களிடமும், பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.