அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

“தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது” - அன்புமணி

Published on

விழுப்புரம்: “தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச் சாவடியில் இன்று (ஏப்.19) தனது வாக்கை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர், “தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.

செய்தியாளாகளிடம் அவர் கூறியதாவது, “வாக்காளர்கள் மவுன புரட்சி நடத்தி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் பாமக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை தொடர்கிறது . இது நாட்டுக்கு தீங்கை ஏற்பத்தும்.

தேர்தல் ஆணையம் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in