2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட நிலையங்களும், 6 சுரங்கப்பாதை நிலையங்களும் இடம்பெற உள்ளன.

பல்வேறு இடங்களில் தூண்கள் அமைத்து உயர்மட்டப் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 3 பகுதிகளாக பிரித்து, பணிகள் நடைபெறுகின்றன.

இந்த வழித்தடத்தில் 500-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட தூண்களில், மேம்பாலம்அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 44.6 கி.மீ. தொலைவில், மேம்பாலப் பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களில் ரெட்டேரி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலப் பாதை அமைக்கும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக, பிரத்யேக கனரக இயந்திரங்களைக் கொண்டு, தூண்களின் மீது பாலங்களை அமைக்கும் பணிகள் அடுத்த7 மாதங்கள் வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in