விளம்பரத்துக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

விளம்பரத்துக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் நாளைக்குள் (ஏப்.17) பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் தொடர்பான அரசியல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த விண்ணப்பங்களை 2 நாட்களில் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி கோரப்பட்டது. அற்ப காரணங்களுக்காக சில விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல் ஆணையம், திமுகவின் பல விண்ணப்பங்களை 6 நாட்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ளது.

ஆனால், மற்ற கட்சிகளின் விளம்பரங்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்குவதில் மட்டும் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. இதனால், ஜனநாயகத்தை நிலைநாட்ட சுதந்திரமாக, நேர்மையாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன.

எனவே, திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க மறுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது நடந்த வாதம்:

நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு: திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்: தேர்தல் விளம்பரங்களுக்கு விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் கடந்த 2023 ஆகஸ்டில் உத்தரவிட்டது. இந்த விதிமுறைகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையை காரணம் காட்டி,திமுகவின் விளம்பரங்களுக்கு மட்டும் முன் அனுமதி வழங்க தேர்தல்ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன்: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து மாநில அளவிலான குழு எடுத்துள்ள முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும். இந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

திமுக தரப்பு வழக்கறிஞர்: இந்த விதிகளின் மூலம், உயர் நீதிமன்றத்துக்குரிய அதிகாரத்தை பறிக்க முடியாது. இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்ற விதி, முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 17-ம் தேதிக்குள் (நாளை) பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in