அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்(55). இவர் அரசு கட்டிடங்கள் கட்டுவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு திட்டங்கள் தயாரித்து கொடுப்பதை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் நிறுவனத்தை அசோக் நகரில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சாலை அமைக்கும் பணிகள், அரசு கட்டிடங்கள் கட்டும் பணிகளில் இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பது குறித்தும் ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக, தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in