

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேவைக்காக திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு தொடர் வண்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடிக்கும் கூடுதலான தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு தொடர் வண்டியில் உரிய ஆவணங்களின்றி நான்கு கோடிக்கும் கூடுதலான தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதுவரை இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பணம் பாஜக வேட்பாளரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. கைதானவர்கள் விசாரணையில் கொடுத்துள்ள வாக்குமூலம் இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கடுமையான குற்றமாகும். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கும் எதிரானதாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைகளை சீர்குலைத்து, வாக்காளர் உணர்வுகளை தங்களது தீய செல்வாக்குக்கு அடிபணிய நிர்பந்திக்கும் குற்றச் செயலாகும்.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த நடத்தை விதி மீறல் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உறுதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.