கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாகனம் மறிப்பு

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாகனம் மறிப்பு
Updated on
1 min read

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவை குற்றம் சாட்டி பேசிய கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் வாகனத்தை சிலர் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவத்தின் சொந்த ஊரான வெல்லம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ஆர்.கோம்பை ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதில் கோடிக் கணக்கில் பணம் கைமாறி உள்ளது.

அதில் முன்னாள் எம்.எல்.ஏ. பரம சிவத்துக்கும் தொடர்பு உள்ளது என பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பரம சிவத்தின் உறவினர் கள் ஏராளமானோர் உள்ளனர். இதனால் அவர்கள், தவறான பிரச்சாரம் மேற்கொள்ளாதீர்கள் என எச்சரித்து ஜோதி மணியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், ஜோதிமணி பேசி முடித்து புறப்பட்டபோது, நீங்கள் குற்றம்சாட்டியதற்கான ஆதாரங்களை காட்டி விட்டுச் செல்லுங்கள், என பரம சிவத்தின் உறவினர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர்.

ஒருவழியாக அவர்களை கடந்து ஜோதிமணி புறப்பட்டுச் சென்றார். ஆனாலும், விடாமல் அவர்கள் இரு சக்கர வாகனங்களில் ஜோதி மணியை துரத்திச் சென்று, அவரது காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜோதிமணியுடன் வந்த வேடசந்தூர் திமுக எம்.எல்.ஏ. காந்தி ராஜன் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சமாதானம் பேசினார். இதையடுத்து, ஜோதிமணியின் கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அவர்கள் அனுமதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in