Published : 07 Apr 2024 04:10 AM
Last Updated : 07 Apr 2024 04:10 AM

சென்னை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் முக்கிய ரயில் திட்டமாக சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் திட்டம் உள்ளது. இந்த திட்டம்1998-ல் தொடங்கி 2021-ம் ஆண்டில் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, மதுரை-திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் தாமதமாகின. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையிலான பணிகள்முடிந்த நிலையில், தற்போது, நாகர்கோவில் - கன்னியாகுமரி வரையிலான இரட்டைபாதை பணிகளும் முடிந்து, இறுதிக்கட்ட சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சோதனை ஓட்டம் நிறைவு: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தில் தற்போது கன்னியாகுமரி வரை பணிகள் முடிந்துள்ளன. அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களை படிப்படியாக இரட்டை பாதைகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயண நேரம் குறையும்: இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் குறையும். ரயில்களின் வேகத்தையும் 130 கி.மீ. வரை அதிகரிக்க முடியும். மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x