“பிரதமர் மோடி தமிழகத்திலேயே வந்து தங்கினாலும் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது” - உதயநிதி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து கும்பகோணத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து கும்பகோணத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Updated on
1 min read

பிரதமர் மோடி தமிழகத்திலேயே வந்து தங்கினாலும், ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, மன்னார்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: நானும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். எங்கு சுற்றினாலும், கடைசியில் இந்த மண்ணுக்கு வந்துதான் சேர வேண்டும். உதயசூரியனையும், முரசொலியையும் யாராலும் பிரிக்க முடியாது.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புதுமைப் பெண்கள் திட்டத்தின் கீழ் 4,250 மாணவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு. பிரதமர் மோடி தற்போது தமிழகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறார். பிரதமர் தமிழகத்திலேயே தங்கினாலும், இங்கு ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற, அனைவரும் வேட்பாளர் முரசொலியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, "நம் மாநிலத்தின் உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம், அதிமுக அடிமைகள் அடகு வைத்துவிட்டனர். எனவே, அந்த உரிமைகளை மீட்டெடுக்க, வேட்பாளர்
முரசொலிக்கு வாக்களித்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.

இதேபோல, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in