தெற்கு ரயில்வேயில் வேக கட்டுப்பாடுகள் நீக்கம்: 170 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் வேக கட்டுப்பாடுகள் நீக்கம்: 170 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் தண்டவாளம் மேம்படுத்தும் பணி விரைவு படுத்தப்பட்டு, வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால்,170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல்பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா என மொத்தம் 413.62 கி.மீ.தூரத்துக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

1,272 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவாளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது. தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in