Published : 04 Apr 2024 06:14 AM
Last Updated : 04 Apr 2024 06:14 AM

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

திருச்சி/சென்னை/ராமேசுவரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர், திருச்சி சிறப்பு முகாமில் இருந்துநேற்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ளசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, கடந்தஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் சாந்தன் உயிரிழந்தார். பின்னர், உயர் நீதிமன்ற அனுமதியின்பேரில் முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மார்ச் 13-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் நேர்காணலுக்கு ஆஜராகினர். பின்னர், மீண்டும் திருச்சிக்குஅழைத்து வரப்பட்டு, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், முருகன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்குச் செல்ல இந்தியமற்றும் இலங்கை அரசுகளிடமிருந்து அனுமதி கிடைத்தது. பின்னர், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்ளிட்ட 3பேரும் நேற்று முன்தினம் இரவுகாவல் துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்ட மூவரிடமும், குடியுரிமை சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அவர்கள் விமானநிலையத்தின் உள்பகுதியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

இலங்கைச் சென்ற லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மூவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். முன்னதாக, விமான நிலையம் வந்திருந்த நளினி, கணவர் முருகனை வழியனுப்பி வைத்தார். அவரது உறவினர்களும் உடன் இருந்தனர்.

இலங்கையில் உள்ள கொழும்புகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் நேற்றுபகலில் சென்றடைந்தனர். அவர்களுடன் வழக்கறிஞர் புகழேந்தி பாண்டியனும் சென்றார்.

விமான நிலையத்தில் குடிவரவுத் துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்திய பின்னர், நேற்றுமாலை மூவரையும் இலங்கைக்குள் அனுமதித்தனர்.

இவர்கள் 3 பேரும் இலங்கையில் வட மாகாணங்களில் உள்ள உறவினர்களை சந்திக்கின்றனர். முருகன்-நளினி தம்பதி, இங்கிலாந்தில் உள்ள மகளுடன் சென்றுவசிக்க விரும்புவதாகத் தெரிகிறது.

ஜெயக்குமார் தமிழகத்தில் திருமணம் முடித்திருப்பதால், அவரது மகன், பேரக் குழந்தைகள் ஆகியோர் சென்னையில்வசித்து வருகின்றனர். எனினும், ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் ஜெயக்குமார் வசிக்க விரும்புவதாகவும், ராபர்ட் பயஸ் உறவினர்கள் நெதர்லாந்தில் வசிப்பதால், அவர் அங்கு செல்ல விரும்புவதாகவும் தெரிகிறது.

எனினும், இலங்கைக்கு மட்டுமேமூவரும் செல்வதற்கு, சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

3 பேர் மீதும் வழக்கு: இந்நிலையில், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x