

சென்னை: அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்க தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வனவிலங்குகள் ஆர்வலரான வழக்கறிஞர் சூர்யகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நடவடிக்கை எடுக்கவில்லை: கடந்த 1980-ம் ஆண்டு இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்தன. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் 19 ஆயிரம் கழுகுகள் மட்டுமே உள்ளன. இயற்கையின் சுகாதாரப் பணியாளர்களாக செயல்படும் கழுகுகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக தமிழகத்தில் கழுகுகள் அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு நிமிசிலைடு, ப்ளூநிக்ஸின், கார்ப்ரோபென் போன்ற மருந்துகளை சட்டவிரோதமாக செலுத்துவதன் மூலம், அந்த கால்நடைகள் இறந்ததும் அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.
எனவே அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்கும்வகையில் இந்த 4 மாவட்டங்களிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும். அத்துடன் இந்த மாவட்டங்களி்ல் இந்த மருந்துகளை தயாரிக்க, விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.
ஜூன் 5-க்குள் தள்ளிவைப்பு: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையேற்று விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்காவிட்டால் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.