

விருதுநகர்: உங்கள் சித்தியாக இருந்து குறைகளைத் தீர்க்கப் பாடுபடுவேன் என்று விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா பிரச்சாரம் செய்தார்.
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகா விருதுநகரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: உங்கள் சித்தியாக இருந்து குறைகளைத் தீர்க்கப் பாடுபடுவேன். அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் இங்கு வரவில்லை. அது நமக்குத் தேவையில்லை.
ஏற்கெனவே இங்கு இருந்தவர் தொகுதிக்கு வரவில்லை என்றுதான் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் எப்போதும் இங்குதான் இருப்பேன். கண்டிப்பாக நான் இங்கிருந்துதான் செயல்படுவேன்.
கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி செய்த ஒரே கட்சி பாஜகதான். ஆனால், சில கட்சிகளில் உள்ளவர்கள் மாதா மாதம் சிறைக்குச் சென்று வருகிறார்கள்.
நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் ஹாட்லைனில் பேசி மக்களின் குறைகளைத் தீர்ப்பேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இவை ஒழிக்கப்பட வேண்டும். மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். அதனால் உங்கள் வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.