

சென்னை: தேர்தல் பத்திர விவரங்கள் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாகக் கருத முடியாது என தென்சென்னை தொகுதி பாஜகவேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை தொகுதி பாஜகவேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கோடம்பாக்கம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு சங்கொலி எழுப்பியும், மலர்களைத் தூவியும் பாஜக தொண் டர்கள் வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டப்பேரவை தொகுதிவாரியாக நாடாளுமன்ற அலுவலகத்தை திறப்பேன். மக்களவை உறுப்பினராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பேன். அதிகாரப்பூர்வமாக தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை பெற்றதால்தான் இத்தனை நாட்களுக்குப் பின்னரும் அதனைப் பார்க்க முடிகிறது.
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாகக் கருத முடியாது. பாஜக மட்டும் தேர்தல் பத்திரம் பெறவில்லை அனைத்துக் கட்சிகளும் பெற்றுள்ளன. ஆனால், குற்றச்சாட்டு மட்டும் பாஜக மீது இருக்கிறது.
திமுக - அதிமுகவுக்கு மாற்றாகஒரு தேசிய சக்தி அவர்களை மீறி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் முடிவுகள்தான் காட்டும். அதேபோல பாஜகவுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கெடுத்தாலும் பாஜக தொடர்புபடுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.